இந்தியாவில் தமிழ்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இல்லையென்றாலும் நிலையான வளர்ச்சி அளவீட்டைப் பதிவு செய்து வரும் இத்தகைய சூழ்நிலையில், குவைத் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.
குவைத் நாட்டைச் சேர்ந்த அல் காரீப் நிறுவனம் இந்தியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் அதனை தமிழ்நாட்டில் அமைக்க முடிவு செய்துள்ளது. சுமார் 49,000 கோடி ரூபாய் முதலீட்டில் அல் காரீப் நிறுவனம் தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தயாரிப்புக்கான தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் மட்டும் சுமார் 59 நிறுவனங்கள் தமிழக அரசுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது என்றும், 213 நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தைத் தமிழ்நாட்டில் துவங்குவதற்கான பணியில் பல்வேறு இடங்களில் இருக்கிறது எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.