குவைத்தில் நிலவும் வைரஸ் பிரச்சினை காரணமாக துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான Anas Al-Saleh அவர்கள் அனைத்து வகை விசாக்களும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக விசா புதுப்பித்தல் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட சூழ்நிலையில், அனைத்து வகையான விசாக்களையும் மார்ச் 1ஆம் தேதி முதல் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே காலாவதியாகிவிட்ட அல்லது வரும் நாட்களில் காலாவதியாகும் அனைத்து விசாவையும் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், காலாவதியான விசாவுடன் நாட்டிற்குள் வசிப்பவர்கள், Visit விசாவில் நாட்டிற்குள் இருப்பவர்கள், வேலைக்காக Entry விசாவில் கடைசி நேரத்தில் குவைத்தில் நுழைந்தவர்கள், விசா முடியும் தருவாயில் தாயகம் திரும்புவதற்கு தயார் நிலையில் இருந்தவர்கள் உட்பட விசா காலாவதி ஆன அனைவர்க்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் உள்ளிட்டவையின் விசாகள் மட்டும் நடைமுறையில் உள்ள ஆன்லைன் வசதி பயன்படுத்தி புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று சம்மந்தப்பட்டத் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு : www.moi.gov.kw.