கொரோனா வைரஸ் பரவி வருவதால், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்காக விமானங்கள், கப்பல்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
வளைகுடா பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குவைத் பிரதமர் அல்-கலீத் அல்-ஹமத்தை அவர்களுக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, தொற்றுநோயின் தாக்கம் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 34 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 26 லட்சம் பேர் என வளைகுடா பகுதியில் உள்ள 6 நாடுகளில் ஒரு கோடியே இருபத்தி ஆறு லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் சிலர் துறைமுக நகரங்களில் வசித்து வருவதால் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களை அனுப்பி தலா 1,500 பேர் வீதம் என மொத்தம் 4,500 பேரை அழைத்து வர வாய்ப்புள்ளது. துறைமுகங்கள் இல்லாத மற்ற பகுதிகளில் ஏர் இந்தியா விமானங்கள் மற்றும் கடற்படை விமானங்களை அனுப்பி, மீட்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, வசதி குறைந்த தொழிலாளர்களை முன்னுரிமை அடிப்படையில் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, மாணவர்களை அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.